ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் சிறுவர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், 15 முதல் 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ம் தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த CoWIN போர்டலின் தலைவர், மருத்துவர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில்,
“தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் CoWIN தளத்தில் முன்பதி செய்துகொள்ளலாம். பெரியவர்களைப் போல் சிறுவர்களிடம் ஆதார் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் இருக்காது என்பதால், அவர்கள் 10ம் வகுப்பு அடையாள அட்டையைக் கொண்டு CoWIN தளத்தில் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாள், நேரம், இடம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் படி 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் எனக்கூறப்படுகிறது.