காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நிர்வாகிகள் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனியா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அந்த சமயத்தில் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்துவிட்டார்.
இதனால் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி பணிகளை தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதனால் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களை கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராகுலை தவிர மற்றவர்களை தலைவராக தேர்வு செய்ய கட்சியினர் விரும்பவில்லை எனவும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு ஏப்ரலில் நடைபெற இருப்பதால் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.