அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 5ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்கிறார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிந்து நேற்று வெளியான தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, டெல்லி உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று நீதிமன்றத்தில் முறையிடவும் ஒ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.