திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மதமாற்ற விவகாரம் இருந்ததாக பாஜகவினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து மாணவி, கடந்த 9ம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று, விடுதி அறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டு, அவருக்கு உடல் நிலை சரியில்லை என வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவியை மதம் மாறச்சொல்லி பள்ளி நிர்வாகம் மன அழுத்தம் கொடுத்ததால் தான் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய முழு விவரத்துடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ட்விட்டரில் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேக் உடன் பாஜகவினரும், இந்து அமைப்பினரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே நேற்று மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி, ரவளிபிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து மாணவி தற்கொலைக்கு முன்பு கொடுத்த கடைசி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை இந்த வீடியோ என்ன பொய்யா?அப்படி பொய் என்றால் அதை நிரூபிக்க வேண்டும் என தஞ்சாவூர் எஸ்.பி.க்கு சவால் விடும் விதமாக பதிவிட்டுள்ளார். இதனால் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தது போல் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.