பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், காணொலிக் காட்சி வாயிலாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் முதன்மைத் திருக்கோயில் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரியும் பக்தர்களின் அடிப்படை வசதியினை முழுமையாக பூர்த்திசெய்யும் பொருட்டு பழனி, பாலசமுத்திரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்டி அதிலிருந்து மலைக்கோயில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றுக்கு 2.31 MLD தண்ணீர் வழங்கும் வகையில் 22 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகைபுரியும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மின்கல மகிழுந்து (Battery Car) பயன்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து கம்பிவட ஊர்தி மேல்நிலையத்திலிருந்து மலைக்கோயில் வெளிப்பிரகாரத்திற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக 13 நபர்கள் செல்லும் வகையில் 23 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி (Lift) உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மலைக்கோயிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மணி ஓசை எழுப்பும் வகையில் புதியதாக நாதமணி மண்டபம் 27 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்முழுவதும் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் சுமார் 5,000 பக்தர்கள் உணவருந்தி வருகிறார்கள். இதன் உபகோயிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி அன்னதானத்திட்டத்தில் உணவருந்த வரும் பக்தர்கள் வசதிக்காக 58 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 108 இருக்கைகளுடன் கூடிய புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.