டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் வேலுநாச்சியார், மருது சகோதர்கள், வ.உ.சிதம்பரனாரின் உருவப்படங்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருந்தது. ஆனால் தமிழக அரசு சமர்பித்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் பிரபலமானவர்கள் இல்லை எனக்கூறிய மத்திய பாதுகாப்புத்துறை நிபுணர்கள் குழு அதனை நிராகரித்தது.
இதுகுறித்து நேற்று தகவல்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி ஆகியோர் சுதந்திரத்திற்காக ஆற்றிய அரும்பணியை கொச்சைப்படுத்திவிட்டதாக மத்திய அரசுக்கு கண்டனங்கள் குவிந்தன. மேலும் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூட, தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது மனவேதனை அளிப்பதாகவும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி அடங்கிய அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவத்துடன் கூடிய அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்காது என்றும், அதற்கான காரணங்கள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளதால் மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் முதல் 3 சுற்றுகள் வரை தமிழக ஊர்தி பரிசீலனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இறுதிப்பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே குடியரசு தின அணிவகுப்புக்கான ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும், 2017,2019,2020,2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி இடம் பெற்றுள்ளதையும் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.