சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்படாததால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து பேசுவதற்காக ஓரிரு நாளில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த, பிரேமலதா விஜயகாந்த, மற்றும் சுதீஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், தேமுதிகவுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்தது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். அத்துடன், கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்றும் கூறினார்.