மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் வழியில் துபையில் தங்கியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் , தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார் .
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு , தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார் . தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மேற் கொண்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் , உயர் சிகிச்சைக்காக மீண்டும் கடந்த வாரம் அமெரிக்கா செல்வார் என்று அறிவிக்கப் பட்டது . கடந்த மாதம் 30 – ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து புறப்பட்டார் .
அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றுள்ளார் . அமெரிக்கா செல்வதற்கு முன் அவர் துபையில் தங்கி உள்ளார் . அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன .
இதனிடையே அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுட்டு ரைப் பதிவில் , ‘ நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் .
நான் நடித்த ‘ சத்ரியன் ‘ திரைப்படத்தை , எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன் ‘ என தெரிவித்திருந்தார் .
இத்துடன் செவிலியர்களுடன் படம் பார்க்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சி.திவ்யதர்ஷினி