ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடியே 10 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, டெல்லியிலும் ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் சாமி பட பாணியில் ராஜேந்திர பாலாஜி கார்களை மாற்றி, மாற்றி தப்பிச் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வண்டி எண்களை வைத்து ராஜேந்திர பாலாஜியை தேடி வந்த நிலையில், அவர் கர்நாடகாவில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து கர்நாடகா விரைந்த தனிப்படை ராஜேந்திர பாலாஜியை ஒசூர் அருகேயுள்ள ஹசன் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரை சென்னை அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.