சென்னை:-
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு, ஆவின், கூட்டுறவு, பஞ்சாயத்து ஆகிய துறைகளில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி தர கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துபாண்டி ஆகியோரிடம் பல தவணைகளாக ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்ததாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வருைகயையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும், மேலும் பல்வேறு பணிகளை செய்யவும் ராஜேந்திரபாலாஜி கூறியதின் பேரில் ரூ. 1½ கோடி செலவு செய்துள்ளேன். ஆனால், வேலை வாங்கி தராமலும், திருப்பி தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராமலும் மொத்தம் ரூ.3 கோடி வரை ஏமாற்றிவிட்டனர் என்று விஜயநல்லதம்பி தெரிவித்துள்ளார.
இவ்வாறு ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக ராஜேந்திரபாலாஜி மீது புகார் உள்ள நிலையில், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.