‘இந்தியா- 2030-க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு’ (India – an Economic Superpower by 2030) என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் பாஜக எம்.பி.-ம் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்குப்பின் ஆண்டுக்கு ஆண்டு 8% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றும், சீர்திருத்தங்கள் மேற்கொண்டும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்தியா தற்போது தேவைப் பற்றாக்குறையால் திண்டாடுகிறது. அதாவது மக்கள் கையில் செலவு செய்யப் பணம் இல்லை. அடுத்த 10 ஆண்டுக்கு 10% பொருளாதார வளர்ச்சி இருந்தால்தான் இந்தியா 2030-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும்.
இப்போது உள்ள பொருளாதார வளர்ச்சியில் சென்றால், 50 ஆண்டுகளுக்குப் பின்பு தான்
நம்மால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் சவால் விடுக்க முடியும்.
வருமானவரி மூலமாக முதலீட்டாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் GST வரியைக் கொண்டுவந்தது தான். மத்திய அரசு கொண்டுவந்த GST வரி மிகவும் குழப்பமானது, அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எந்த படிவத்தை நிரப்பது எனவும் தெரியவில்லை.
ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இருந்து ஒருவர் என்னிடம் வந்து, எங்கள் பகுதியில் மின்சாரமே இல்லை எவ்வாறு நாங்கள் GST படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது என்று கேட்டார். நான் முதலில் உன் தலைக்குள் ஏற்று, அதன்பின் பிரதமர் மோடியிடம் இதைக் கூறு என்றேன்.
இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தம் காங்கிரஸ் காலத்தில், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. எனவே, அதற்காக நரசிம்மராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்