தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையை வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தான் முதற்கண் நோக்கமாக உள்ளது. எனது தந்தையால் முன் மொழியப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்ற செயல்படுவேன்.
கடல் சீற்றம் அதிகமாக உள்ள நேரங்களில் காணாமல் போகும் மீனவர்களை எளிதில் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார்.