ஆவின், போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் பணியிடங்களை நிரப்புவதில் 3 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டு வந்த முறைகேடுகளை களையும் விதமாக, இனி பொதுத்துறை நிறுவன பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப வழி வகை செய்யும் சட்ட மசோதாவை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
இதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பணி நியமனங்கள் இனி டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கைக்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கவனித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.