சென்னை:
சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, பிரச்சாரம், தேர்தல் குழுக்கள் தொடர்பாக செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன், செயற்குழு கூட்டத்தில், 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஆளும் கட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.