தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக இருந்து வந்த மகேந்திரன் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி மாநில தலைவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரனை விலக்க வேண்டும் என்று பலமுறை நாங்கள் கோரிக்கை விடுத்து இருந்தோம். இதனை ஏற்று தலைவர் கமல்ஹாசன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வழிநடத்தியவர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தை மகேந்திரன் படுகுழியில் தள்ள பார்த்தார்., மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை தெற்கு தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என்று அனைத்து கட்ட பணிகளையும் மறைமுகமாக பணியாற்றியவர் மகேந்திரன்.
தலைவரின் வெற்றியை பறிக்க பாடுபட்ட பணிகளை கூட அவர் சிங்காநல்லூர் தொகுதியில் செய்ய வில்லை. அவரது எண்ணம் முழுக்க முழுக்க, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற கூடாது என மறைமுகமாக செயல்பட்டவர் மகேந்திரன். எனவே அவரை தூக்கி வீசி உள்ளதாக கூறினார் .