தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக இரு கட்சி தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர். இதன் மூலம் கூட்டணியை உறுதி செய்ததுடன் கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்பின் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்பொழுது சமக தலைவர் சரத்குமார் மற்றும் ஐ.ஜே.கேவை சேர்ந்த நிர்வாகி ரவிபாபு ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தனர். நேற்று மூன்றாவது அணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் வரும் தேர்தலில் ஐ.ஜே.கே-சமக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்தையும் கூட்டணிக்கு இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.