குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்குத் தடை விதித்த ஒன்றிய அரசின் செயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருடந்தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் சிறப்பான முத்திரை பதித்து விருதுகளும், பரிசுகளும் பெற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் வரும் 26.01.2022 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் பங்கேற்க அனுமதியில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் ஆகிய தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள் அனுமதிக்கப்படக் கூடாது என உத்தரவு போட்டது யார்? என்ன காரணம்? தமிழ்நாடு தயாரித்துள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி மத்திய அரசு என்ன நினைக்கிறது?
ராணி வேலுநாச்சியார் காலனி ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்துப் போராடி சாதனை படைத்தவர். வ.உ.சிதம்பரனார் காலனி ஆதிக்கத்தை எல்லா முனைகளிலும் எதிர்த்துப் போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 30 வயதில் 40 ஆண்டுகால தீவாந்திர சிறை தண்டனை பெற்றவர்.
பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை, தனது கனல் மூட்டும் கவிதைகளாலும், கருத்தாயுதம் தரும் கட்டுரைகளாலும் எழுச்சியூட்டிய புரட்சியாளர் மகாகவி பாரதியார் காலத்தை வென்று வாழ்பவர். இவர்களது தியாக வாழ்வைச் சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணிவகுப்பில் இடமில்லை எனில் தமிழகம் கொந்தளிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். உடனடியாகத் தமிழக அரசின் ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தமிழகத்தையும், தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய அரசின் வன்மப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சி அமைப்புகளைக் கேட்டுக் கொள்வதுடன் இப்போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.