லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதாக அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லட்சுமிபூர் கேரி என்ற பகுதியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக அம்மாநில துணை முதல்வர் கேசவ் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துக்கொள்ள சென்றனர்.
விவசாயிகள், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கருப்புக்கொடி காட்ட லக்கிம்பூர் கேரி அருகேயுள்ள திக்கோனியா என்ற இடத்தில் குவிந்தனர். அப்போது துணை முதலமைச்சரை வரவேற்க சென்ற பாஜகவினரின் கார்கள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், கார்களுக்கு தீ வைத்தனர். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரில் இருந்ததாகவும் அவரது தூண்டுதல் காரணமாகவே விவசாயிகள் மீது கார்கள் மோதியதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இறந்த 4 விவசாயிகளில் ஒருவர், ஆஷிஷ் துப்பாக்கியால் சுட்டதால் இறந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் கற்களை கொண்டு தாக்கியதால் கார்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும் அதன் அடியில் சிக்கியதாலேயே உயிரிழப்புகள் நேரிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
சம்பவ இடத்தில் தானோ, தனது மகனோ இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறிய அவர், விவசாயிகள் கூட்டத்தில் இருந்த சிலரின் தாக்குதலில் பாஜகவினர் 3 பேரும் ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். தனது மகன் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் அவர் உயிரோடு திரும்பியிருக்க முடியுமா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
8 பேர் இறந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் கேரி பகுதியில் உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்முறைக்கு காரணமாக இருந்ததற்காக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பிரியங்கா நீங்கள் பின் வாங்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் உங்கள் தைரியத்தை கண்டு அஞ்சுகிறார்கள். நீதிக்கான இந்த அகிம்சைப் போராட்டத்தில் நாட்டின் விவசாயிகளை வெற்றிபெறச் செய்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தகவல் காவல்துறை தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இன்று சந்திக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். முன்னதாக லக்கிம்பூர் செல்ல திட்டமிட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.