தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 156 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்கு என்ணிக்கை நிறைவு பெற்று வெற்றி வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரை விட 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
எளிய மனிதரில் ஒருவர் தற்போது சட்டசபை செல்லவுள்ளார். ஒருவரின் வெற்றியை அதற்கு தொடர்புடையவர் தான் கொண்டாடுவார். ஆனால் ஒரு சிலரின் வெற்றியை ஊரே கொண்டாடும். அப்படிப்பட்ட ஒருவரின் வெற்றியைத்தான் தற்போது ஒரே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை சட்டசபைக்கு செல்லும் மாரிமுத்து எம்.எல்.ஏ.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்கள். அவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு அரசியல்வாதியா என்று வியக்க வைத்துள்ளார் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து.
திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடுவாகுடி கிராமத்தில் சிமெண்ட் பூச்சே காணாத எளிமையான வசதிகளற்ற கூரை வீடு தான் நடப்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் இல்லம் என்பது நாம் அனைவரையும் ஒரு நிமிடம் மலைக்க வைத்துள்ளது.
மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார் . அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்த இவர் 25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வருகிறார். மக்களுக்கான போராட்டமே இவரை வேட்பாளராகவும் அறிவிக்க வைத்தது.
மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கி கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டு இருந்தது பெரும் கவனத்தைப் பெற்றது. அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியடைந்துள்ள சுரேஷ்குமார் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.