கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நலம் குறித்து விசாரிக்க சசிகலா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஏற்கனவே, சற்று நேரத்திற்கு முன், மதுசூதனனின் உடல்நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்ற நிலையில், சசிகலாவும் சென்றுள்ளார்.
முன்னதாக, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்ள மாட்டேன் என எடப்பாடி பழனிசமி பிடிவாதம் காட்டி வருகிறார். சசிகலா அனுப்பிய சமாதான பேச்சுவார்த்தை எதற்கு ஈபிஎஸ் பிடிகொடுக்கவில்லை.
இதையடுத்து, தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. வருகிற 23ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சசிகலா சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையின் உள்ளே இருக்கும் நிலையில், சசிகலா அங்கு வந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சசிகலாவின் வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியேற, அதிமுக கொடியுடன் சசிகலா உள்ளே நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.