சென்னை:
கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கடுமையாகக் கண்டித்துள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
பொதுமக்களை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதக்குலத்திற்கே எதிரானது என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேஸ் சிலிண்டர், மெல்ல உயர்ந்த கடந்த ஜூலை மாதம் 850 ரூபாயை அடைந்தது.
இந்தச் சூழலில் நேற்று கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை 875 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச் சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதாரத்துக்கு எதையும் செய்யாத மத்திய அரசு,
எரிகாற்று உருளையின் விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதி நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத வகையிலான விலையேற்றத்தாலும், அதனால் விளைந்த அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வாலும் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி,
அன்றாடச்செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது திணறித் திண்டாடிக் கொண்டிருக்கையில், இப்போது எரிகாற்று உருளையின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.
ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றித் துளியளவும் சிந்திக்காது தனிப்பெரு முதலாளிகளின் இலாப வேட்டைக்கு வாசல் திறந்துவிடும் பாஜக அரசின் இச்செயல் வெட்கக்கேடானது.
மனிதநேயமோ, மக்கள் பற்றோ இல்லாமல் , அதிகாரத்திமிர் கொண்டு தன்முனைப்போடு குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதக்குலத்திற்கே எதிரானது” என்று மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை விடுத்துள்ளார்.