அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவானது கடந்த டிசம்பரம் மாதம் 17ம் தேதி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை 3வார தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கடந்த ஜனவரி 5ம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜி, கைதுக்கு முன்னதாக உயர் நீதிமன்றம் தனது முன் ஜாமீனை தள்ளுபடி செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவானது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய உத்தரவிட்டனர். அத்துடன் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணை அமைப்புகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், வெளி ஊர்களுக்கு எங்கும் செல்ல கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.