தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஒருபோதும் அவர்களை அ.தி.மு.க.வில் இணைக்கமுடியாது. ஒருபோதும் அ.தி.மு.க. அவர்களுக்குத் தலைவணங்காது. சிலர் திட்டமிட்டு அ.தி.மு.க.வை கைப்பற்ற முயற்சிசெய்கின்றனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். அடிமட்ட தொண்டர்தான் இனி அ.தி.மு.க.வில் முதல்வராக முடியும்.
தமிழக மக்கள் மனதில் வாழக்கூடிய ஒரே தலைவர் ஜெயலலிதா. தி.மு.க. வாரிசு அரசியல் நடத்துகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை அனைத்துத் தொண்டர்களும் நிறைவேற்ற வேண்டும். 18 பேர் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்தார்கள். டி.டி.வி.தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது” என்றார்.