தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா மீது அவதூறு பரப்பி கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய கோரி தமுமுகவினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கோவை நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் எங்களுடைய மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவை ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் அவர்களை கொலை செய்தவர் என்றும் கொலை செய்தவர் இன்று பாபநாசம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் உண்மை செய்தி அல்ல. உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்பி அதன் மூலம் தனது வன்மத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி அதன்மூலம் குளிர்காய நினைக்கும் இவரைப் போன்ற நபர்களைக் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆகவே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.