விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும், மக்கள் இயக்கக் கொடியையும், நடிகர் விஜய்யின் படத்தையும் பயன்படுத்தித் தேர்தலை சந்திக்க விஜய் அனுமதி அளித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதியாகும்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம் வகிக்கும் பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது. பின்னர் தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தது.
இதேபோல், நாம் தமிழர் கட்சி, மக்கல் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை உள்ளாட்சி தேர்தலில் களமிறக்க பச்சைக் கொடி காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், விஜய் வெளிப்படையாக இதற்கு ஒப்புதல் அளித்ததுபோல் இல்லாமல், தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிப் போட்டியிட வேண்டும் எனவும் நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகச் கூறப்படுகிறது.
அரசியல் தொடர்பாக அவ்வப்போது இசை வெளியீட்டு விழாக்களிலும், திரைப்படங்களில் பேசி நடித்து வந்த விஜய், தேர்தல் அரசியலில் இறங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.