பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்பியை கைது செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட, அவர் நள்ளிரவில் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த கட்சிக்காரரைத் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி அடித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர், இவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது தொடர்பாக நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடைபெற்ற ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துச் சென்றதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர். எம்பி தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், திமுக எம்பி ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்றிரவு நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அவர்களை அங்கேயே தங்க வைத்தனர்.
இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் பரிதாபமாக படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த 5 பேர் இருந்தனர். இதனிடையே அனைவரும் காலை 9 மணிக்கே விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.