விளையாட்டு உலகின் மிக பெரிய விருதாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது விளையாட்டு உலகின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான விருதை ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பெற்றார். சிறந்த அணிக்கான விருதை ரக்பி உலக கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு கிடைத்தது. அதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஜெர்மனியின் கூடைப்பந்து வீரர் டிர்க் நோவிட்ஸ்கி பெற்றார்.
இதில் கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணம் ஆக கருதப்படும் விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பிறகு அணி வீரர்கள் சச்சினை வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகளை பெற்று அவருக்கு இந்த விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் விருதை வழங்கினார்.
விருது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், இந்த விருது மிகவும் சிறப்புமிக்கது. அதேசமயம் உலக கோப்பை வென்ற தருணத்தை உணர்வுகளால் விவரிக்க முடியாது என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.