ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.அந்நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார்.
அரையிறுதி சுற்றில் தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை, சானியா மிர்சா ஜோடி சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது.
இறுதிப் போட்டியில் சானியா மிர்சா, கிச்செனோ நாடியா ஜோடி சீன வீராங்கனைகளான சாங் சுவாய் – பெங்க் சுவோ இணையை எதிர் கொண்டது.இந்த போட்டியில் சானிய மிர்சா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் கண்ட சானியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.
இதனிடையே பெடரேஷன் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். அவருடன் அங்கிதா ரெய்னா, டியா பாட்டியா, ருதுஜா போசலே, கர்மான் கவுர் தண்டி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.விஷால் உப்பல் கேப்டனாகவும், அங்கிதா பாம்ப்ரி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயம் மற்றும் குழந்தை பெற்றது காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளார் சானியா.