தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த ஏபி டிவில்லியர்ஸ் ஏறக்குறைய 10 சீசன்களாக அந்த அணிக்கு விளையாடியுள்ளார். 5 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் டிவில்லியர்ஸ் காரணமாக அமைந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஓய்வு குறித்து டிவில்லியர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில்,
நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவும், மிகுந்த உற்சாகத்துடனும்தான் விளையாடினேன். எனக்கு 37 வயதானாலும் எந்தவிதமான உற்சாகக் குறைவின்றிதான் களத்தில் விளையாடினேன். எனக்கு ஆர்சிபி அணியுடனான ஐபிஎல் பயணம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும்.
ஆர்சிபி அணியுடனான பயணம் மறக்க முடியாததாக, வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ளத்தக்க பயணமாக இருந்தது. எனக்கும் குடும்பத்தாருக்கும் ஆர்சிபி எப்போதும் நெருக்கமாக இருக்கும், தொடர்ந்து ஆதரவு தருவோம். நான் எப்போதும் ஆர்சிபிக்காரர்தான் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.