டி-20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அணியில் ஷிகர் தவான், யுகேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக வீரரான நடராஜன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிசப் பந்த், இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளனர். இதேபோல் ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகியோரைக் காத்திருப்பு வீரர்களாக பிசிசிஐ அறிவித்துள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்