இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல். டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வீரர்களுக்கு முறையாக பயோ-பபுளை முறையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் , கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்திப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த (கொல்கத்தா-பெங்களூரு) போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த மும்பை இந்தியன்ஸ்-ஹைதராபாத் அணிகளுக்கான போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணி வீரர் விர்திமான ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய போட்டியை ஐ.பி.எல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் கூறியிருந்தது.
கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் ஐபிஎல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடரை ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா கூறுகையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, வீரர்களுக்கும் பரவி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் நடப்பாண்டு இபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.