தமிழக வீரர் ஜெகதீசனை ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து CSK கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னைக்கு இது 3-வது வெற்றி. ஹைதராபாத்துக்கு இது 5-வது தோல்வி.
துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த 29-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே அடித்தது. சென்னை வீரர் ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார்.இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் CSK அணி 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தமிழக வீரரான ‘ஜெகதீசன்’ விளையாடவில்லை. கடந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடிய பிறகும் அணியில் இல்லாதது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பதிலாக ‘பியூஷ் சாவ்லா’ தேர்வானார்.
இதுபற்றி விளக்கமளித்த தோனி “ஒரு இந்திய பேட்ஸ்மேன் சரியாக விளையாடவில்லை என்பதால் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தோம். அதனால் தான் தொடக்க வீரராக சாம் கரண் விளையாடினார். ஜெகதீசனை 7மற்றும்8-ம் நிலை வீரராக விளையாடும்படி சொல்வது நியாயமாக இருக்காது. இந்த வெற்றியின்மூலம் நாங்கள் இரு புள்ளிகளைப் பெற்றுள்ளோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஒரு குறிக்கோளுடன் விளையாடி ரன்கள் எடுத்தார்கள். சூழலை நன்குப் புரிந்துகொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.