இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். வர்ணனையாளருமான பிரட்லீ இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளார். அதன்படி 41 லட்சம் மதிப்பிலான பிட்காயினை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எனக்கு இரண்டாவது நாடு. இங்கு கிரிக்கெட் விளையாடிய போதும் சரி தற்போது நான் ஓய்வு பெற்ற பிறகும் சரி என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். இந்திய மக்கள் தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். அதன்படி எனது ஒரு பிட்காயினை இந்தியாவுக்கு நிதி உதவியாக அளித்திருக்கிறேன்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய சற்று உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். மேலும் முன்கள பணியாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் எனக் கூறியுள்ளார் அத்துடன் இதனை முன்னெடுப்பதற்கு பேட் கம்மின்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வீரரும், நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு 30 லட்சம் ரூபாயை நீதி உதவியாக அளித்துள்ளார். மேலும் பலரும் உதவ முன்வருமாறு கேட்டுக்கொண்டார். இதனால் ஊக்கம் பெற்ற பிரட்லீ தற்போது இந்தியாவிற்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.