இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது 20-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை மலிங்கா தனது யூ டியூப் சேனலில் அதிகாரபூர்வாக தெரிவித்திருக்கிறார்.
“நான் என் டி 20 பந்துவீச்சு காலணிகளுக்கு 100 சதவிகிதம் ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். என் காலணிகள் ஓய்வெடுக்கும் போது, விளையாட்டின் மீதான என் காதல் ஒருபோதும் ஓய்வு கேட்காது” , 20-20 கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அணிக்கும், அணியில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது காணொளியில் தெரிவித்துள்ளார். மலிங்கா, இலங்கை அணி தவிர்த்து இந்தியன் பிரீமியர் லீக்(மும்பை இந்தியன்ஸ்), பிக் பாஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் பிற போட்டிகளில் விளையாடிய அணிகளில் முக்கிய நபராக இருந்துள்ளார்.
மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் “எனது டி 20 காலணிகளைத் தொங்கவிட்டு, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்! எனது பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, மேலும் வரும் ஆண்டுகளில் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்” என்று மலிங்கா ட்வீட் செய்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்