லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாபர் அசாம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், “பாபர் அசாம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாதபோதே அவரை எனக்குத் தெரியும். நானும் பாபரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். கடந்த 2010ல் பாபர் என்னிடம் காதலைத் தெரிவித்ததையடுத்து,நாங்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தோம், எங்கள் குடும்பங்களுக்கும் தகவல் கொடுத்தோம், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
பின்னர் பாபரும் நானும் நீதிமன்றம் மூலம் திருமணம் செய்ய முடிவு செய்தோம். 2011 ஆம் ஆண்டில், என்னை திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை வாடகைக்கு பல இடங்களில் தங்க வைத்தார். அந்த நேரத்தில், நான் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டே இருந்தேன்,
என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்த பாபர், என்னுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமாக்கினார். நான் கர்ப்பமானதை வெளியில் கூறக்கூடாது எனவும் மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அடித்தார்.பின்னர்,அவர் தனது நண்பர்களின் உதவியுடன் என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.2017-ல், நான் பாபருக்கு எதிராக நசிராபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் புகார் அளித்தேன்.
எனக்கு பாபர் அசாமிடம் இருந்து நீதி கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டால் பாபர் அசாமுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாபர் தரப்பில் இருந்தோ அல்லது கிரிக்கெட் வாரிய தரப்பில் இருந்தோ இன்னும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.