பாராலிம்பிக் போட்டிகள் பங்கேற்கவிருக்கும் இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விராட் கோலி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகிறது.
2020ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று தொடங்கி, வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும்.
மேலும் தமிழக வீரர் மாரியப்பன், தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணியினருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
“டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எங்களை பெருமைப்படுத்துவீர்கள் என நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.