அமீரகம்:-
இந்திய அணியின் கடைசி லீக் போட்டிக்கு பிறகு ஒய்வறையில் மிகவும் உருக்கமான பேச்சை தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழங்கியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாக இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.
இந்த டி20 தொடர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவருக்குமே மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த தொடருடன் விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார்.
இதே போல இந்த தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுக் கொடுக்காததால் அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன் வரவில்லை.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு ரவி சாஸ்திரியை வழியனுப்பி வைக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய ரவி சாஸ்திரி,
கடந்த 5 வருடங்களில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து நான் நன்கு அறிவேன். உலகின் சிறந்த அணிகளை 3 வடிவ கிரிக்கெட்டிலும் நாம் வீழ்த்தியுள்ளோம். அந்த அளவிற்கு பலமிக்க அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்திய அணிதான் பலமிக்க அணி என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால் உலகின் பலமான அணிகளில் இந்தியாவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது எனக்கு ஏமாற்றமே. சாக்கு போக்கு கூறுவதை நான் விரும்ப மாட்டேன். நியூசிலாந்துக்கு எதிராக நாம் தைரியமாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்த உலகக்கோப்பை தொடருக்குள் நாம் கற்ற பாடத்தை சரி செய்ய வேண்டும். ஐபிஎலுக்கும், உலகக் கோப்பைக்கும் கொஞ்சம் இடைவேளை இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஓய்வறையில் இருந்து பெருமைமிக்க மனிதராக வெளியேறுகிறேன் என ரவி சாஸ்திரி விடை பெற்றார்.
அதே சமயம் சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது.
மேலும், 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.