இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலி கேப்டனாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின், இந்திய அணியின் டி20,ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலி கேப்டனாகத் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரி்க்கா ஆகிய அணிகளில் டெஸ்ட் மற்றும் டி20,ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேப்டனாக இருப்பவர் அனைத்துப் பிரிவுகளையும் சமாளிப்பதும், சரியான கலவையில் அணியைத் தேர்வு செய்வதும் பலநேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகும் பட்சத்தில், தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.