இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதனையடுத்து இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க உதவும் வகையில், டெல்லியில் உள்ள 250க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் ‘மிஷன் ஆக்சிஜன்’ என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த அமைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து போராடுபவர்களின் பின்னால் நாம் இணைந்து நிற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் பேட் கம்மின்ஸ், பிரட்லீ இருவரும் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வாங்க நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.