இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் பாகிஸ்தானின் 4 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து கராச்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 191 ரன்களும், இலங்கை அணி 273 ரன்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் சதமடித்தனர்.
இதனையடுத்து 473 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. நாளை நடைபெறும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக அளவு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து நான்கு வீரர்கள் சதம் அடிப்பது என்பது அரிய நிகழ்வாகும்.இதன்மூலம் 2007ஆம் ஆண்டு இந்தியாவில் வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட்,தினேஷ் கார்த்திக் நான்கு வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து சாதனை படைத்தனர். அந்த சாதனையை 12 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சமன் செய்துள்ளனர்.