நடப்பு ஐபிஎல்-2021 தொடரின் கடைசி இரு லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அக்டோபர் 8 ஆம் தேதி இரு ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தன. இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இருபோட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பை-சன்ரைசர்ஸ், ஆர்சிபி-தில்லி ஆகிய இரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் மதிய ஆட்டத்தில் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளும் இரவு ஆட்டத்தில் ஆர்சிபி-தில்லி அணிகள் மோதுவதாக இருந்தன. இதனால் முந்தைய ஆட்டத்தின் முடிவைத் தெரிந்து கொண்டு, ரன்ரேட் அடிப்படையில் ஆட்டத்தின் முடிவை மாற்றியமைக்க இரு அணிகளும் முயற்சிக்கலாம் என்பதால், ஆட்டத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று யூகங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. ஐபில் நிர்வாகம் காரணம் என்னவென்று அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்