எகிறிய பந்து: ஆட்டத்தை ரத்து செய்த நடுவர்கள்
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா – விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டியில் பந்து தாறுமாறாக எகிறி பவுன்சர் ஆகியதால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா – விக்டோரியா அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் விக்டோரியா அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது.
ஆனால் எதிர்பாராத விதமாக டிராப்-இன் ஆடுகளத்தில் அதிக அளவில் பந்து பவுன்சர் ஆனது. பனிப்பொழிவின் தாக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பான இடத்தில் பந்து பிட்ச் ஆகும்போது எதிர்பாரத விதமாக பவுன்சர் ஆகியது.
இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள பயந்தனர். விக்டோரியாவின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்து ஷான் மார்ஷ் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் பேட்ஸ்மேன்களின் ஹெல்மேட்டை பதம் பார்த்தது.
இதனால் முதல் நாளிலேயே வீரர்கள் விளையாட மறுத்தனர்.அதனை தொடர்ந்து முதல்நாள் ஆட்டம் 39.4 ஓவருடன் முடிவடைந்தது.
அதன்பின் பிட்ச் பராமரிப்பாளர்கள் பந்து பவுன்ஸ் ஆகாத வகையில் ஆடுகளத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆராய்ந்தனர்.
அப்போது ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை என போட்டியை ரத்து செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே மெல்போர்ன் ஆடுகளம் தனது தனித்தன்மையை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.