டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கடாரியா முதல் கோலை அடித்தார். முதலாவது கால்பாதியின் கடைசி நிமிடத்தில் தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியில் ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணியின் வந்தனா மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என இந்தியாவை மீண்டும் முன்னிலை பெற செய்தார்.
முதல் கால்பாதியை போல் இரண்டாவது கால்பாதியிலும் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க அணி ஒரு கோல் அடித்து 2-2 என சமன செய்தது.
மூன்றாவது கால் பாதியிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தனர். இதனால் மூன்றாவது கால்பாதியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமமாக இருந்தனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.
ஆனால் கடைசி கால்பாதியில் இந்திய அணி தொடக்கத்தில் ஒரு கோல் அடித்து அசத்தியது. அத்துடன் 4-3 என முன்னிலை பெற்றது. இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் போட்டியை வெற்றி பெற்றது. அத்துடன் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்தது.