ராகுல் டிராவிட் இந்தியா கண்டெடுத்த சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியென இரண்டிலும் 10,000+ ரன்களை எடுத்த கிரிக்கெட் வீரர்களில் டிராவிட் ஒருவர். 2000 ஆம் ஆண்டுகளில் சேவாக், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோருடன் டிராவிடும் இந்திய அணிக்கு ஒரு தூணாக இருந்தார். இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.
ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட், அவரை போலவே மிகப்பெரிய வீரராக வருவதற்கான அனைத்து அடையாளங்களுடனும் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார்.கர்நாடகாவில் நடந்த அண்டர் 14 மண்டல அளவிலான போட்டியில் வைஸ் பிரசிடண்ட்ஸ் லெவன் அணியில் ஆடிவரும் சமித் டிராவிட், தர்வாத் மண்டல அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
250 பந்தில் 201 ரன்களை குவித்த சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 295 ரன்களை குவித்தார் சமித் டிராவிட். பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்ட சமித் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் எதிரணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மித வேகப்பந்து வீச்சாளரான சமித் டிராவிட், பவுலிங்கிலும் அசத்துகிறார்.