இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல். டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வீரர்களுக்கு முறையாக பயோ-பபுளை முறையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில் , கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்திப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா அணி-ஆர்.சி.பி அணிக்கு இடையிலான இன்றைய போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.
சந்திப் வாரியர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இருவரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம், கடந்த 48 மணி நேரத்தில் இவர்களுடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் ஐபிஎல் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.