இலங்கை – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இலங்கையின் கல்லியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணரத்னே அடித்த பந்து தாக்கியதில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் தலையில் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் களத்தில் இருந்த பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இலங்கை – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இலங்கையின் காலேவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிஷாங்கா – திமுத் கருணரத்னே களம் இறங்கினர். முதல் இன்னிங்ஸின் 24வது ஓவரை மே.இ தீவுகள் அணியின் ராஸ்டன் சேஷ் வீசினார்.
அவருடைய பந்தை எதிர்கொண்ட திமுத் கருணரத்னே ஓங்கி ஒரு பவர் ஷாட் அடிக்க, அந்த பந்து ஷாட் லெக்கில் ஹெல்மெட் பாதுகாப்புடன் நின்றிருந்த மே.இ. தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஜெர்மி சோலான்சோ தலையில் தாக்கியதால் சுருண்டு மயங்கி விழுந்தார்.
இதனால், களத்தில் இருந்த வீரர்களும் பார்வையாளர்களும் அதிர்சி அடைந்தனர். உடனடியாக, மருத்துவக்குழுவினர் விரைந்து வந்து அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது சோலோஜனோ சுயநினைவுடனே உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்.
அப்போது நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை ஹியூஸ் அடித்து ஆட முற்பட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அவருடைய இடது கழுத்துப் பகுதியை பந்து பலமாக தாக்கியது. நிலைகுலைந்த பில் ஹியூஸ் மைதானத்தில் சரிந்தார். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு சிகிச்சையளித்தும் பயனில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.