சேலம்:-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் ‘சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன்’ சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில்; 8 கோடி மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உதயகுமார், தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் சீனிவாசன், அவரது மகளும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் தலைவருமான ரூபா குருநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட ராகுல் டிராவிட் பேசியதாவது:-
சேலத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன்.
சேலம், கோவை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மைதானத்தை கட்டமைக்க உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனென்றால் இனி வரும் காலங்களில் இதுபோன்று புறநகர்ப் பகுதிகளில் இருந்து தான் அதிகளவிலான திறமையான கிரிக்கெட் ஹீரோக்கள் உருவாக உள்ளனர். இதுபோன்று மைதானங்கள் உருவாவதால், அதிகளவிலான இளைஞர்களுக்கு விளையாட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் வலுக்கிறது.
விளையாட்டின் மூலம் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
ஒருநாள் நானும் இங்கு கிரிக்கெட் விளையாடலாம், அதில் எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு வயதாகிவிட்டதால் அதற்கு சாத்தியமில்லை. எனவே இளம் அணிக்கு பயிற்சியளித்து அவர்களை இங்கு நிச்சயம் விளையாட வைப்பேன் என்று தெரிவித்தார்.
இதனிடையே புதிதாக திறந்து வைக்கப்பட்ட மைதானத்தில் ராகுல் டிராவிட் பௌலிங் போட எடப்பாடி பேட்டிங் செய்து மகிழ்ந்தார். இதனை அங்கிருந்த அனைவரும் ரசித்தனர்.