தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 4 ,5 ,11,12 ஆகிய 4 தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள 17 லட்சத்து ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் பெயர் சேர்க்க மட்டும் புதிதாக 13 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 454 பேரும், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 9 ஆயிரத்து 459 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நாளை முதல் பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின் பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.