பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரடியாகவே வருமான வரித்துறையினர் சோதனைக்கு அழைத்து சென்றது சர்ச்சையை கிளப்பியது.
அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.ஆனால் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக விஜய்யின் ரசிகர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை வழக்கமான ஒன்றுதான் என்றும், அதற்கும் பாஜகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஷூட்டிங் நடத்த மத்திய அமைச்சர் அனுமதி கொடுக்கவில்லை எனவும், என்எல்சி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அனுமதி கொடுத்ததாகவும் தெரிவித்தார். மற்றபடி எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். அப்படி இருக்கும் போது நான் எப்படி அவரை பற்றி தவறாக பேச முடியும் எனவும் கூறினார்.
மெர்சல் படத்திற்கு பிறகு பாஜகவிற்கு விஜய்க்கும் இடையில் மிகப்பெரிய வார்த்தைப் போர் நடைபெற்று வந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரே விஜய்யை புகழ்ந்து இருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.