தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நியாயவிலைக் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.
நாளை முதல் தமிழகத்தில் மாநிலத்தின் எந்த பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமையும்.
இதனால் நியாயவிலைக் கடையில் திடீரென தேவை அதிகரிக்கும் என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் 5 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்த பின், வேறு மாநிலத்தவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.